மரியுபோலின் நிலை கவலையளிக்கிறது: உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
ரஷியப் படைகளின் கடுமையான தாக்குதல்களால் உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் நிலை கவலையளிப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷிய ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 2 மாதங்களை நெருங்க இருக்கும் இந்தப் போரில் ரஷியாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
ரஷிய வீரர்களின் தாக்குதலுக்கு உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும், ரஷியப் படைகளின் தாக்குதலால் உக்ரைன் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
அந்த வகையில், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் ரஷியாவின் தாக்குதல்கள் அதிக உயிரழப்புகளையும் சேதங்களையும் சந்தித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘ மரியுபோலில் மீண்டும் மக்களை வெளியேற்றும் பணியைத் தீவிரப்படுத்தி வருகிறோம். கடுமையான சேதத்தை சந்தித்த மரியுபோலின் நிலை கவலையளிக்கிறது’ எனத் தெரிவித்தார்.
மேலும், ரஷியப் படைகள் மரியுபோலில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் உடனடியாக சரணடைய வேண்டும் என கெடு விதித்துள்ளன.