அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களைக் கடந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ உதவியினால் உக்ரைனும் ரஷியாவுக்கு எதிராகப் போராடி வருகிறது.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் பிற நாடுகளுக்கு மின்னல் வேகத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் மெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளின் ஆயுத விநியோகங்கள் மோதலைத் தூண்டுகிறது.
எங்களிடமும் அனைத்துவிதமான ஆயுதங்களும் உள்ளன. வேறு யாரும் இதுபோன்று பெருமைகொள்ள முடியாது. ஆனால், நாங்கள் பெருமைகொள்ள மாட்டோம். மாறாக, தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்துவோம். இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு உதவும் பிற நாடுகளுக்கும் தடை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.