உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி 2 மாதங்களைக் கடந்துள்ளது. போரில் உக்ரைனுக்கு அதிக சேதங்களை உருவாக்கியுள்ள ரஷியா தொடர்ந்து அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துக் கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக, மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் அனைத்தும் முழுமையாக ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியப் படைகள் 2 ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சில அடுக்குமாடிக் கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
முன்னதாக, கீவில் போர் துவங்கியதிலிருந்து இதுவரை பலியானவர்களில் 1,150 பேரின் உடலை மீட்டுள்ளதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்திருந்தது.
இவற்றில் 50-70 சதவீதமான உடல்களில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.