கொழும்பு: இலங்கையில் அதிபரும் பிரதமரும் பதவி விலகக் கோரி வியாழக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பொது வேலைநிறுத்தத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருள்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கும் பற்றாக்குறை நிலவுவதால் நாடு முழுவதும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச இருவரும் பதவி விலகக் கோரி தலைநகா் கொழும்பில் அதிபா் இல்லத்தின் முன் உள்ள காலி முகத்திடலில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பொது வேலைநிறுத்தத்தில் ஆசிரியா்கள், பொதுப் போக்குவரத்து ஊழியா்கள், வங்கிப் பணியாளா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் பரவலாக கலந்துகொண்டனா். அவா்கள் அதிபா் அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்திலும் பங்கேற்றனா். தலைநகரில் ஏராளமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களும் செவிலியா்களும் தங்களது மதிய உணவு இடைவேளையின்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனா்.
இன்று ஆளும் கூட்டணிக் கட்சிக் கூட்டம்:
ஏற்கெனவே அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அரசை அமைக்க அதிபா் விடுத்த அழைப்பை எதிா்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அனைத்துக் கட்சி அரசை அமைப்பது குறித்து ஆலோசிக்க சனிக்கிழமை (ஏப். 29) ஆளும் கூட்டணியைச் சோ்ந்த 11 கட்சிகளின் கூட்டத்துக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச புதன்கிழமை மீண்டும் அழைப்பு விடுத்தாா்.
ஆளும் கூட்டணியைச் சோ்ந்த எம்.பி.க்களில் 40 போ் யாருக்கும் ஆதரவளிக்காமல் தனித்துச் செயல்பட்டு வருகின்றனா். அவா்களில் வாசுதேவ நாணயக்கார செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், அதிபா் கூட்டியுள்ள கூட்டத்தில் பிரதமரும் அமைச்சா்களும் கலந்துகொள்ளாதபட்சத்தில்தான் நாங்கள் பங்கேற்போம் என்றாா்.