டாக்கா: வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸôமும் திரிபுராவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டார். தலைநகர் டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து வங்கதேச ஊடகச் செயலாளர் இஹ்ஷானுல் கரீம் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது, பரஸ்பர உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஷேக் ஹசீனா எடுத்துரைத்தார். மேலும் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸôம், திரிபுராவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான பிணைப்பு வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த 30 நிமிட சந்திப்பில் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், "இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மட்டுமன்றி சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தோம். மேலும் பிரதமர் மோடி சார்பில் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு விடுத்தேன். இருதலைவர்களின் வழிகாட்டுதலின்பேரில் இந்தியா- வங்கதேச உறவு மென்மேலும் வலுப்பெறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.