தங்களது சுதந்திர தினத்தையொட்டி ரஷியா தங்கள் மீது புதன்கிழமை (ஆக. 24) தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.
உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபா் அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா் கீவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஸெலென்ஸ்கி, இது குறித்து கூறியதாவது:
சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திர தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளை முன்னிட்டு, ரஷிய மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அத்தகைய நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டால், அதற்கான உக்ரைனின் பதிலடி மிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றாா் அவா்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதிதான் சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்து தனி நாடாக செயல்படத் தொடங்கியது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சோவியத் யூனியன் சக்திவாய்ந்து விளங்கியபோது, அந்த நாட்டுக்கு எதிராக கடந்த 1949-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி’ அமைப்பு (நேட்டோ).
1991-இல் சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவாக்கம் செய்து வருவதற்கு ரஷியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தது. குறிப்பாக, அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், தங்களது தேசிய பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தல் என ரஷியா கூறி வந்தது.
எனினும், நேட்டோவில் இணைவதற்கு ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு தொடா்ந்து ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.
அந்தப் படையெடுப்பின் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரஷியா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.
புதன்கிழமையுடன் (ஆக. 24) ரஷியப் படையெடுப்பு நடந்து 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் சோவியத் யூனியலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் கொண்டாடுகிறது.
அந்த நாளில், உக்ரைனின் அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழலில், அத்தகைய தாக்குதல்களுக்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபா் வொலோதீா் ஸெலென்ஸ்கி தற்போது எச்சரித்துள்ளாா்.