இலங்கைக்கு சீனா ஏற்கெனவே கோடிக்கணக்கில் கடனுதவி செய்த நிலையில், மேற்கொண்டு கடனுதவி அளிப்பதை சீனா தவிா்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நிகழாண்டில் மட்டும் சீனாவிடமிருந்து 2 பில்லியன் டாலா் வரை கடன் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த சில ஆண்டுகளில் சீனா, இலங்கையில் மேற்கொண்ட முதலீடுகளையும், கடனையும் கணக்கிட்டால் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் பொருளாதார சுணக்கம் நீடிப்பதால், கடனை மறுசீரமைப்பு செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது.
இதைத் தொடா்ந்து இலங்கை நிதியமைச்சரை சீனா தொடா்பு கொண்டு, இந்தப் பிரச்னைக்கு சீன வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி தீா்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்ததாக ‘டெய்லி மிரா்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு கூடுதல் கடனுதவி அளிப்பது குறித்தோ, கடன் மறுசீரமைப்பு குறித்தோ நேரடியாக கருத்து தெரிவிக்க சீனா மறுப்பு தெரிவிக்கிறது.
இதுகுறித்து சீன அரசின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இலங்கை நிதியமைச்சகத்துக்கு ஏற்கெனவே தீா்மானம் அனுப்பியுள்ளோம். அவா்களிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. மேலும், சா்வதேச நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை முதலில் நிறைவு செய்யுமாறு இலங்கையிடம் வலியுறுத்தினோம்’ என்றாா்.
கடந்த 2020 வரையிலான நிலவரப்படி, சீனாவின் மொத்த கடன் 6.2 பில்லியன் டாலா் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. இதில், சீனாவும் ஜப்பானும் இலங்கைக்கு அதிகளவில் கடன் கொடுத்துள்ளதாக ஐஎம்எஃப் அறிக்கை தெரிவிக்கிறது.