இலங்கையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய இந்தியா உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சாரம், எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலிய பொருள்களைத் தயாரிக்கும் நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள், தங்களது நிதியைப் பயன்படுத்தி, இலங்கையில் நீண்டகால அடிப்படையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய முன்வருமாறு அந்நாட்டின் மின்சாரம், எரிசக்தித் துறை கடந்த ஜூலையில் அழைப்பு விடுத்தது.
இதன்பேரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த 24 நிறுவனங்கள், இலங்கையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக இலங்கை மின்சாரம், எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளாா்.
இந்தத் தகவலை ‘கொழும்பு பேஜ்’ என்ற இணையதள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தத் தீா்மானங்களை இலங்கை அமைச்சரவை நியமித்த குழு பரிசீலித்து, 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அமைச்சா் காஞ்சனா விஜேசேகர கூறியுள்ளாா்.
இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 50 பெட்ரோல் நிலையங்களைத் திறந்தும், சேமிப்புக் கிடங்கில் முதலீடு செய்தும் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்தப் போவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தது.