கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக வட கொரிய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபரின் மனைவி ரி சோல் ஜூ தோன்றியுள்ளார். கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்தே அதிபரின் குடும்பத்தினர் பொது நிகழ்ச்சிகளிலும் மக்கள் முன் தோன்றுவதையும் தவிர்த்துவருகின்றனர்.
இந்நிலையில், சந்திர புத்தாண்டை முன்னிட்டு வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் மன்சுடே கலையரங்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கிம்மும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.
நாடு நிறுவப்பட்ட ஆண்டு விழாவில், கிம்மின் மறைந்த தாத்தா மற்றும் தந்தையின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அரண்மனைக்கு தனது கணவருடன் ரி சோல் ஜூம் சென்றிருந்தார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த பொது நிகழ்ச்சியில்தான் அவர் கடைசியாக கலந்து கொண்டார்.
இதுகுறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், "வரவேற்பு இசை இசைக்க, (கிம்) அவரது மனைவி ரி சோல் ஜூவுடன் திரையரங்கில் தோன்றினார். அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு, மேடை ஏறி்ய இருவரும், கலைஞர்களுடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்து கொண்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆட்சிக் கவிழ்ப்பு ஆண்டு தினம்: மியான்மரில் திரும்புமா அமைதி?
முன்னதாக பல நேரங்களில், சமூக, வணிக மற்றும் இராணுவ பயணங்களின்போது கிம் தனது மனைவி ஜூயை அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு நேர் மாறாக, கிம் உன்னின் தந்தை தனது மனைவிகளுடன் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக அரசு ஊடகங்களில் தோன்றாமல் இருந்தார். அப்போது, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.