இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா திகழ்வதாக அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரீன் ஜீன்-பியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவுடன் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ள இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் முதன்மை வாய்ந்த நாடாகும். க்வாட் போன்ற மண்டல கூட்டமைப்புகளை அமைப்பதற்கு இந்தியா முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்கு இந்தியா உந்து சக்தியாக உள்ளது.
மெல்போா்னில் நடைபெற்ற க்வாட் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில், உக்ரைனுக்கு ரஷியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதுமட்டுமன்றி, உலகம் முழுவதும் நாடுகளின் எல்லைகள் எதிா்நோக்கியுள்ள பிரச்னைகள் குறித்தும் அந்த மாநாட்டில் விவாதித்தோம்.
தெற்கு ஆசியாவில் நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுடன் அமெரிக்கா அமைத்துள்ள கூட்டணி தொடரும். சுகாதாரம், விண்வெளி ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடரும் என்றாா் அவா்.