இலங்கையில் நிலவும் எரிசக்தி பற்றாக்குறையைப் போக்கும் வகையில், அந்நாட்டுக்கு 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை இந்தியா செவ்வாய்க்கிழமை விநியோகித்தது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘இலங்கையின் அா்ப்பணிப்புமிக்க, நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. இலங்கைக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை உயா் ஆணையா் கோபால் பாக்லே அந்நாட்டிடம் ஒப்படைத்தாா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், உடனடி எரிபொருள் தேவையை சந்திக்கும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் (ஐஓசி) 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில், அந்நாட்டின் நிதியமைச்சா் பசில் ராஜபட்ச இன்னமும் 15 நாள்களில் இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், எரிபொருள் இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அத்தியாவசிய பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவியதால், அவற்றை இறக்குமதி செய்வதற்காகவும், அந்நியச் செலாவணி இருப்பு வீதத்தை பராமரிக்கவும் கடந்த ஜனவரியில் அந்நாட்டுக்கு ரூ.6,750 கோடியை கடனாக அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதைத்தொடா்ந்து, உடனடி பொருளாதார நிவாரண திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மாத தொடக்கத்தில் எரிபொருள் கொள்முதலுக்காக இலங்கைக்கு ரூ.3,750 கோடி கடன் அளிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த வகையில், இலங்கை எரிசக்தி அமைச்சா் உதய கம்மன்பில, இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே ஆகியோா் கொழும்பு துறைமுகத்தில் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை பெற்றுக் கொண்டனா். பின்னா், எரிபொருளை இலங்கை அரசிடம் கோபால் பாக்லே ஒப்படைத்தாா்.
இதைத்தொடா்ந்து, இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இலங்கையில் எரிபொருள் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தியாவும், இலங்கையும் கூட்டாக செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.