உலகையே மாற்றிப் போட்டுள்ள கரோனாவின் புதிய திரிபு, உலக ஆராய்ச்சியாளர்களை கவலை அடைய செய்துள்ளது. டெல்டா மற்றும் ஒமைக்ரான் திரிபுகளின் அம்சங்களை கொண்டுள்ள டெல்டாக்ரான், பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்டாக்ரான் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இதுகுறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இது எந்தளவுக்கு தீவிரத்தன்மை கொண்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் இரண்டாம் அலைக்கு டெல்டா கரோனாவும் மூன்றாம் அலைக்கு ஒமைக்ரானும் காரணமாக இருந்துள்ளது. பாதிப்புகள் தொடர்ந்து குறைந்துவருவதால் முந்தைய திரிபுகளை போல டெல்டாக்ரான் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்தாண்டு, சைப்ரஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லியோனிடோஸ் கோஸ்ட்ரிகிஸ் என்ற ஆராய்ச்சியாளர் டெல்டாக்ரான் கரோனா திரிபை முதன்முதலாக கண்டறிந்தார். 25 பேருக்கு டெல்டாக்ரான் கரோனா இருப்பது தெரியவந்துள்ளது என அவரின் குழு தெரிவித்தது.
இந்த 25 பேரின் மரபணு வரிசைமுறையை ஜிஐஎஸ்ஏஐடி என்ற சர்வதேச தரவுகள் மையத்திற்கு கடந்த 7ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த அமைப்பு வைரிஸில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்துவருகிறது. டெல்டா மரபணுக்குள்ளேயே ஒமைக்ரானில் இருப்பது போன்ற மரபணு அம்சங்களை டெல்டாக்ரான் கொண்டுள்ளது என லியோனிடோஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆய்வகத்தில் ஏற்பட்ட தவறினால் மட்டுமே இந்த புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டதாக உலகின் முன்னணி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.