கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் முதல்முறையாக சுறா தாக்குதல் காரணமாக நீச்சல் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பல கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற போண்டி மற்றும் ப்ரோண்டே கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன. சுறா தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு அருகே அதை பிடிப்பதற்காக மீன்பிடி பொறி அமைக்கப்பட்டு வேறேதேனும் சுறா உள்ளதா என்பதை கண்காணிக்க அங்கு ட்ரோன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிக பெரிய நகரமான சிட்னிக்கு தெற்கே 20 கிமீ தூரத்தில் உள்ள லிட்டில் பே கடற்கரையில் சுறா ஒன்று நீச்சல் வீரர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதுகுறித்த விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் வீரரின் விவரங்கள் குறித்து இன்னும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து ராண்ட்விக் கவுன்சில் மேயர் கூறுகையில், "இது நமது சமூகத்திற்கு மகிப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது கடற்கரையோரத்திற்கு பின்புறம், இதுபோன்ற பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் பரிதாபமாக மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.
முர்ரே ரோஸ் மலபார் மேஜிக் ஓஷன் நீச்சல் போட்டி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஆயிரக்கணக்கான நீச்சல் வீரர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு இந்த சுறா தாக்குல் நடைபெற்றுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். போட்டி ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் மார்ச் 6ஆம் தேதி போட்டி நடைபெறும்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் முதன்மை தொழில் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "குறைந்தது 3 மீட்டர் (9.8 அடி) நீளமுள்ள வெள்ளை சுறா தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று அதன் சுறா உயிரியலாளர்கள் நம்புகின்றனர். 1963 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் இதுவாகும்" என்றார்.