உக்ரைனிலுள்ள இந்தியர்கள் இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, உக்ரைனில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில்,
“தற்போது உக்ரைனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அனைத்து இந்தியர்களும் தாங்கள் இருக்கும் வீடு, விடுதிகளிலேயே அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
தலைநகர் கீவ் நோக்கி வருபவர்களும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் எல்லையோரங்களிலிருந்து வருபவர்களும் தற்காலிகமாக உங்களின் இருப்பிடங்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.”