உக்ரைனிலுள்ள மக்கள் ரஷிய தாக்குதலில் இருந்து தப்பிக்க மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலுக்கு பயந்து தப்பிக்க வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கீவ் நகரில் வசிக்கும் மக்கள் பலரும் ரயில்கள் மற்றும் தங்களது வாகனங்களில் நகரைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.