குண்டு வீசப்பட்ட தனது இல்லத்தைப் பார்த்து உக்ரைன் பத்திரிகையாளர் நேரலையில் அழுத காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர் ஓல்கா மால்செவ்ஸ்கா. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் இதுகுறித்த செய்திகளை சக ஊடகவியலாளருடன் நேரலையில் விவாதித்து வந்தார்.
ரஷிய படைகளின் முன்னேற்றம், தலைநகர் கிவ்வின் நிலை, உக்ரைன் வீரர்களின் எதிர்தாக்குதல் உள்ளிட்டவை குறித்து நேரலையில் இருவரும் விவாதித்து வந்தனர்.
இதையும் படிக்க | உக்ரைன்: கேரளம் மக்களின் விமானச் செலவை அரசே ஏற்கும்: பினராயி விஜயன்
ஓல்கா உக்ரைனில் குண்டு வீசி அழிக்கப்பட்ட தன்னுடைய இல்லத்தை திரையில் பார்த்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை நினைத்து நேரலையிலேயே அழுதார்.
அப்போது பேசிய அவர், “நேற்றிரவு எங்களது இல்லத்தின்மீது குண்டு வீசப்பட்டது. நல்வாய்ப்பாக என்னுடைய தாயார் பத்திரமான இடத்திற்கு சென்று விட்டார். அவரிடமிருந்து எனக்கு செய்தி வந்திருக்கிறது. வீட்டின் தரைத்தளத்தில் அவர் பதுங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்” எனக் குறிப்பிட்டார்.
கடந்த 3 நாள்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன.