ஆப்கானிஸ்தானில் கிழக்கு குனார் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உள்பட 6 பேர் பலியாகினர்.
ஆப்கன் இஸ்லாமிய அமீரகத்தின் உளவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து, குனார் மாகாணத்தின் நரங் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தலிபான் கமாண்டர், அவரது மகன் மற்றும் நால்வர் கொல்லப்பட்டதாகவும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு சூழல் பெரிதும் மாறியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
'காமா பிரஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த திங்கள்கிழமை காஸெமி பகுதியில் ஒரு மருத்துவர் மற்றும் அவரது டிரைவர் காரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த வாரம், 25 வயது இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மகளின் இறப்புக்கு நீதி கேட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்' எனத் தெரிவித்துள்ளது.