தேர்தல் தோல்வி...வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற உத்தரவிட்ட டிரம்ப்; அதிர்ச்சி தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்ற ராணுவ அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
டிரம்ப்
டிரம்ப்

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் தோல்வி அடைந்தார். இருப்பினும், அதிபர் தேர்தலில் பெற்ற தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மாபெரும் மோசடி நடைபெற்றதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்தி வந்தார். 

தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க உச்ச நீதிமன்றம் வரை சென்ற போதிலும் அவரது முயற்சி நிறைவேறவில்லை. இதையடுத்து, 2021ஆம் ஆண்டு, ஜனவரி 6ஆம் தேதி, நாடாளுமன்றம் கூடி தேர்தலில் வெற்றி ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனுக்கு சான்றிதழ் வழங்கவிருந்தது. 

அப்போது, தனது ஆதரவாளர்களை தூண்டும் விதமாக ட்ரம்ப் பேசினார். இறுதியாக அவரது தூண்டுதலின் பெயரில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்போது நாடாளுமன்றத்திக்கு உள்ளேயே அவரது ஆதரவாளர்கள் புகுந்தனர். ஜனநாயகத்தின் தாயகமாக திகழும் அமெரிக்க வரலாற்றில் இது கருப்பு தினமாக அமைந்தது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்ற ராணுவ அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாகத் தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து வெளியாகியுள்ள ஆவணத்தில், ஜோ பைடனின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக அதிகாரத்தில் இருக்க டிரம்ப் எடுக்கத் தயாராக இருந்த மோசமான நடவடிக்கைகளை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

கடந்த 2020 டிசம்பர் 16ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், வாக்குப்பதிவில் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பறிமுதல் செய்யுமாறும் இது தொடர்பாக ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இருப்பினும் இந்த உத்தரவில் அதிபராக இருந்த டிரம்ப் கையெழுத்திடவில்லை.  ஏன் அவர் அதில் கையெழுத்திடவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் குறித்து அந்நாட்டின் நாடாளுமன்ற குழு நடத்தும் விசாரணையில் இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் கையெழுத்திடவிருந்த வரைவு உத்தரவில், "அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்ற வேண்டும். அதை பாதுகாப்புச் செயலர் பகுப்பாய்வு செய்வார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com