காபூல்: ஆப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர், 76 பேர் காயமடைந்துள்ளதாக திங்கள்கிழமை உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை விவகாரங்களுக்கான மாநில அமைச்சகம், ஆப்கானிஸ்தானின் 15 மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 76 பேர் காயமடைந்ததாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 20 நாள்களில் ஆப்கானிஸ்தான் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் பேரழிவுகளைத் தடுக்க அவர்கள் கடுமையாக போராடி வருவதாக பேரிடர் மேலாண்மை அமைச்சக அதிகாரிகளின் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் 2-வது நாளாக 7,000-க்கும் அதிகமான கரோனா பாதிப்பு!
இதனிடையே, கடுமையான பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலைகளில் சிக்கித் தவித்துவந்த நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பேரிடர் மேலாண்மைத்துறை துணை அமைச்சர் ஷுஜா கூறியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்க பல்வேறு உதவும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஷுஜா கூறியுள்ளார்.
கடந்த 18 ஆம் தேதி மேற்கு பத்கிஸ் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களிலும் 28 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 வீடுகள் தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது.
உறைபனி குளிர்காலம் மற்றும் கடுமையான பனிப்பொழிவு ஆகியவை ஆப்கானிஸ்தானின் வேலையின்மை, பட்டினி மற்றும் வறட்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.