ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெர்மனியில் நாளுக்குநாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மன் நாட்டில் 2,03,136 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 9.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் 188 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, இதுவரை 1,17,314 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் இதுவரை கரோனா வைரஸுக்கு எதிராக 61.1 மில்லியனுக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.