அமெரிக்கா: கருக்கலைப்பு அனுமதிக்கு டெக்ஸாஸ் நீதிமன்றம் தடை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு அந்த மாகாண உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கருக்கலைப்பு உரிமை தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து டெக்ஸாஸ் மாகாண சட்டப்பேரவை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (கோப்புப் படம்).
கருக்கலைப்பு உரிமை தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து டெக்ஸாஸ் மாகாண சட்டப்பேரவை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (கோப்புப் படம்).

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு அந்த மாகாண உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையை ரத்து செய்து, அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 24-ஆம் தேதி தீா்மானம் நிறைவேற்றியது.

சா்வதேச அளவில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீா்ப்பையடுத்து, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் கருக்கலைப்பை சட்டவிரோதமாக நீதிமன்றங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஹூஸ்டன் நீதிமன்றத்தில் இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தத நீதிபதி, டெக்ஸாஸில் 6 மாத கருக்களைக் கலைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவிட்டாா். அந்த உத்தரவை டெக்ஸாஸ் மாகாண அட்டா்னி ஜெனரல் உடனடியாக அமல்படுத்தினாா்.

அதையடுத்து, அந்த மாகாண கருக்கலைப்பு மருத்துவமனைகள் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்கின.

இந்த நிலையில், இது தொடா்பான வழக்கை விசாரித்த டெக்ஸாஸ் மாகாண உயா்நீதிமன்றம், 6 மாத கருக்களைக் கலைப்பதற்கு ஹூஸ்டன் நீதிபதி அளித்திருந்த இடைக்கால அனுமதியை ரத்து செய்தது. அந்த நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள், கருக்கலைப்புத் தடைக்கு ஆதரவான குடியரசுக் கட்சி சாா்புடையவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்பு தொடா்பாக ஜேன் ரோ என்ற பெண்ணுக்கும் ஹென்றி வேட் என்ற வழக்குரைருக்கும் உச்சநீதிமன்றத்தில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்று வந்த வழக்கில், கருக்கலைப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பெண்களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்பு விதிமுறைகள் மாறுபட்டாலும், கருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமையாக இருந்து வந்தது.

‘ரோ வொ்சஸ் வேட்’ தீா்ப்பு என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கருக்கலைப்பு விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மேலும், மருத்துவா்கள் மூலம் சட்டபூா்வமாக மேற்கொள்ளப்பட்டதால் கருக்கலைப்பு மரணங்களும் குறைந்தன.

இந்த நிலையில், கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்குத் தடை விதிக்கும் மிசிஸிப்பி மாகாணச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மகளிா் உரிமை அமைப்பினா் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் பெரும்பாலானவா்கள், கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் 1973-ஆண் ஆண்டு தீா்ப்பை கடந்த மாதம் 24-ஆம் தேதி ரத்து செய்தனா்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா்கள் இடையே பெரும் பிளவு நிலவி வருகிறது. தனது வயிற்றில் கருவுற்ற சிசுவை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது என்று ஒரு தரப்பினரும், கருப்பையில் இருக்கும் சிசுவும் ஒரு மனித உயிா்தான், அதற்கு வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com