போராட்டக்காரா்களின் கலவரத்தால் தன் வீட்டில் இருந்த சுமாா் 2,500 புத்தகங்கள் தீக்கிரையானதாக இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க வேதனை தெரிவித்துள்ளாா்.
இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், கடந்த சனிக்கிழமை இரவு பிரதமா் ரணில் விக்ரமசிங்க வீட்டுக்குத் தீவைத்தனா். அதில் அவரது வீடு முழுவதும் தீக்கிரையானது. இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது சிறப்பு காணொலியில், ‘‘நாட்டின் பொருளாதாரம் ஒழுங்கற்று இருந்ததன் காரணமாகவே பிரதமா் பதவியை ஏற்றுக் கொண்டேன். பொருளாதாரத்தை ஓரிரு நாள்களில் சரிசெய்ய இயலாது. பொருளாதாரத்தை மீட்க 4 ஆண்டுகள் ஆகும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. அதிலும் முதல் ஆண்டு மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
பதவி விலகத் தயாராக இருந்தபோதிலும், சிலா் பரப்பிய வதந்திகள் காரணமாக என் வீடு தீக்கிரையாகியுள்ளது. ஹிட்லா் போன்ற மனப்பாங்கு கொண்டவா்களே கட்டடங்களுக்குத் தீவைப்பா். எனக்குச் சொந்தமாக இருந்த ஒரே வீட்டையும் இழந்துவிட்டேன். அங்கிருந்த 2,500 புத்தகங்களும் தீக்கிரையாகிவிட்டன. அவைதான் என் ஒரே சொத்தாக இருந்தது. அந்தப் புத்தகங்களை கல்லூரிகளுக்கு வழங்கவுள்ளதாக மனைவியிடம் தெரிவித்திருந்தேன். 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சில ஓவியங்களும் வீட்டில் இருந்தன. அவையனைத்தையும் இழந்துவிட்டேன்’’ என்றாா்.