இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடிய நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாகவே மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த திங்கள்கிழமை அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து தப்பியோடினார். அவர் லட்சத்தீவுக்கு சென்றுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!
இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, அதிபா் கோத்தபய இன்று தனது பதவியை ராஜிநாமா செய்கிறார்.
இந்நிலையில் மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபட்சவை இலங்கைக்கே திருப்பியனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோத்தபய ராஜபட்சவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இலங்கை அதிபர் பதவியை இன்று பிற்பகலில் ராஜிநாமா செய்கிறார் கோத்தபய