இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், இலங்கை விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியாவுக்கு வருகின்றன.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு எரிபொருள், உணவு உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத சூழ்நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், இலங்கை விமானங்கள் எரிபொருளுக்காக இந்தியா வந்து எரிபொருள் நிரப்பிவிட்டுச் செல்கின்றன.
ஜூன் 29 முதல் ஜூலை 13 வரை கொழும்பில் இருந்து 41 விமானங்கள் கொச்சி வந்துள்ளன. கடந்த மே 27 முதல் கணக்கிட்டால் 94 விமானங்கள் கொச்சி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்புவதற்காக வந்த விமான நிறுவனங்களில் அதிகம் வந்தவை ஸ்ரீலங்கன் ஏர்வேஸ். மேலும், ஏர் அரேபியா, ஏர் ஏசியா, ஃப்ளை துபாய், கல்ஃப் ஏர், ஓமன் ஏர் மற்றும் ஜசீரா ஆகிய விமானங்களும் வந்துள்ளன.
கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய விமான நிலையங்கள், இலங்கை விமானங்களின் தரையிறக்கத்தை அனுமதித்துள்ளதாகவும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு வழிகளில் துணை நிற்பதாகவும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இலங்கையில் இருந்து ராணுவ விமானங்கள் எதுவும் எரிபொருள் நிரப்ப வந்ததா என்று தெரியவில்லை.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இதுகுறித்து, 'இலங்கை விமானங்களை அனுமதிப்பதன் மூலம் இந்திய விமான நிலையங்கள் தங்கள் கடமைக்கு அப்பால் செயலாற்றியுள்ளன. அண்டை நாடுகளுடனான உறவுகளை மேலும் மேம்படுத்த இது உதவும்' என்றார்.
இலங்கை மக்கள் தங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் ஜனநாயக வழிமுறைகளின்படி முன்னேற்றத்திற்கான பாதைகளை நோக்கிச்செல்லும் போது இந்தியா துணை நிற்கும் என வெளியுறவுத்துறை துறை முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா: அதிகாரபூர்வ அறிவிப்பு