இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச மற்றும் மூன்று முன்னாள் அதிகாரிகளும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி, ஜூலை 28ஆம் தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதி இல்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக இலங்கையின் ஊழல் ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதிபா் பதவியில் இருந்து ஜூலை 13-ஆம் தேதி விலக உள்ளதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தாா். ஆனால், பதவியை ராஜிநாமா செய்வது தொடா்பாக எதுவும் தெரிவிக்காத அவா், விமானப் படை விமானம் மூலம் மனைவியுடன் மாலத்தீவுக்கு புதன்கிழமை தப்பிச் சென்றாா். அங்கிருந்து, நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை அவா் நியமித்தாா்.
நேற்று மின்னஞ்சல் வாயிலாக ராஜிநாமா கடிதத்தை கோத்தபய ராஜபட்ச அளித்த நிலையில், இன்று இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றம் இந்த பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.