உணவு தானியங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய உலக வர்த்தக அமைப்பு அனுமதி அளிக்க வேண்டுமென நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்கள் கலந்து கொள்ளும் உணவுப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் இதனை அவர் தெரிவித்தார். இந்த கருத்தரங்கு இந்தோனேஷியாவில் உள்ள பாலியில் நடைபெற்றது.
இதையும் படிக்க:இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!
உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி, எந்த ஒரு நாடும் தனது பொது கிடங்கில் மானிய விலையில் வாங்கி வைத்திருக்கும் உணவு தானியங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை. உலக வர்த்தக அமைப்பு அவ்வாறு மானிய விலையில் வாங்கி வைத்துள்ள உணவு தானியங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இந்த விதிமுறை உலக வர்த்தக அமைப்பின் உருகுவே சுற்றிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: “சிறு விவசாயிகளின் தேவைக்காக எங்களிடம் உணவு தானியங்கள் உள்ளன. நாங்கள் உணவு தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளோம். உலகில் நிலவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பசியினைப் போக்க இந்தியா தயாராக உள்ளது. உலக வர்த்தக அமைப்பு இந்த விவகாரத்தில் தயக்கம் காட்டி வருகிறது. ரஷியா-உக்ரைன் போரினால் உலகின் பல நாடுகளும் உணவுப் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. சிங்கப்பூர் தலைமையிலான 80 நாடுகள் இந்த உணவு ஏற்றுமதி தடையை நீக்கக் கோரி உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். அதே போல உலக நாடுகள் பலவும் ஐநாவின் உலக உணவு திட்டத்தின் கீழ் உள்ளூரில் நிலவும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி காலமானார்
உணவு, எரிபொருள் மற்றும் உரம் போன்றவைகள் உலக நாடுகளுக்கு பொதுவான பொருள்கள். வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதன் இருப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும். உலகில் உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான அவசரம் உருவாகியுள்ளது. இந்தியா உணவு தானியங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அதே போல ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை என்ற சிறப்பு வாய்ந்த திட்டதையும் இந்தியா செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டினை (2023) சர்வதேச திணைகள் ஆண்டாக உலக நாடுகள் கொண்டாட உள்ளன. இந்தியா திணைகள் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்பதால் உலகின் உணவுப் பாதுகாப்பிற்கு தனது மதிப்புமிக்க பங்களிப்பை இந்தியா அளிக்க முடியும்.” என்றார்.