இலங்கையின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகக்கோரி கொழும்பில் போராட்டம் தொடர்கிறது.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால், ரணில் விக்ரமசிங்க பதவியேற்புக்கு இலங்கை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரணிலை எதிர்த்து போராட்டம் வலுத்து வருவதால், இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அரசாணை வெளியிட்டார் ரணில்.
எனினும், தலைநகர் கொழும்பில் ரணிலுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரணில் விக்ரமசிங்க பதவி விலகும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்ய நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதிபர் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும ஆகியோா் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.