எரிபொருள் பற்றாக்குறையால் தவித்து வரும் இலங்கைக்கு மேலும் 40,000 டன் டீசலை வழங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா அனுப்பிய 40,000 மெட்ரிக் டன் டீசல் கொழும்பு நகரை திங்கள்கிழமை வந்தடைந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 50 கோடி டாலா் (சுமாா் ரூ.3,880 கோடி) மதிப்பிலான எரிபொருளை கடனுக்கு அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கையொப்பமானது.
அதன்படி, கடந்த மாா்ச் மாதத்தில் 40,000 டன்னும் ஏப்ரல் மாதத்தில் 40,000 டன்னும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு டீசல் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மேலும் 40,000 டன் டீசலை தற்போது இந்தியா அனுப்பியுள்ளது.
அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து கடனுக்கு அளிக்கப்படும் எரிபொருள்தான் கைகொடுத்து வருகிறது.
வரி விகித அதிகரிப்புக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்:
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு இடையே, அரசின் வரி வருவாயை அதிகரிப்பதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டில் மதிப்புக் கூட்டு வரி, தனி நபா் வருமான வரி, நிறுவனங்களின் வருவாய் வரி விகிதங்களை அப்போதைய அரசு குறைத்தது.
இதனால், அரசுக்கான வரி வருவாய் மிகவும் குறைந்தது.
இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வரி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க பிரதமா் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளாா்.
அந்தப் பரிந்துரைக்கு திங்கள்கிழமை கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.