இழப்பீட்டு தொகையை செலுத்த முடியாத நிலையில் அம்பர் ஹெர்ட்...அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வழக்கு

அமெரிக்க நடிகை அம்பர் ஹெர்ட்டின் பாலியல் குற்றம்சாட்டு குறித்து ஆறு வாரத்திற்கு விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், ஜானி டெப்புக்கு இழப்பீடாக 10.35 மில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
அம்பர் ஹெர்ட்
அம்பர் ஹெர்ட்

அமெரிக்க நடிகை அம்பர் ஹெர்ட்டுக்கு எதிரான அவதூறு வழக்கில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை செலுத்தும் நிலையில் அம்பர் ஹெர்ட் இல்லை என அவரது வழக்கறிஞர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

உலகின் கவனத்தை ஈர்த்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த அவதாறு வழக்கின் விசாரணை புதன்கிழமையன்று நிறைவடைந்தது. அதில், ஜானி டெப், அம்பர் ஹெர்ட் ஆகியோர் பரஸ்பரம் அவதாறு கருத்துகளை தெரிவித்து கொண்டனர் என்றும் இருப்பினும், அம்பர் ஹெர்ட் அதிகமான அவதாறு கருத்துகளை வெளியிட்டதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

ஜானி டெப்பால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்னாள் மனைவி அம்பர் ஹெர்ட் வெளியிட்ட குற்றச்சாட்டு குறித்து ஆறு வாரங்களாக விசாரணை நடைபெற்றுவந்தது. இதன் முடிவில், ஜானி டெப்புக்கு அம்பர் ஹெர்ட் 10.35 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் அம்பர் ஹெர்ட்டுக்கு ஜானி டெப் 2 மில்லியன் டாலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இழப்பீட்டை ஹெர்ட் செலுத்துவாரா என அவரின் வழக்கறிஞரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இல்லை. முற்றிலும் இல்லை. தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார். அதற்கு சிறப்பான அடித்தளம் தீர்ப்பில் உள்ளது" என்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, ஜானி டெப்பை 'மனைவியை தாக்குபவர்' என பிரட்டன் டேப்ளாய்ட் செய்தி நிறுவனமான தி சன் குறிப்பிட்டது. இதற்கு எதிராகவும் டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதில் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. ஆனால், முன்னாள் மனைவிக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக ஹெர்ட் கூறியுள்ளார். 

கடந்த 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் ஹெர்ட் எழுதிய கட்டுரையில், வீட்டிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பிரபலம் என தன்னை குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதில் டெப்பின் பெயரை ஹெர்ட் குறிப்பிடவே இல்லை. 

இதற்கு மத்தியில், தன்னை பாலியல் குற்றவாளி என ஹெர்ட் கூறியதாக அவருக்கு எதிராக டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக அளிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். டெப்பின் வழக்கறிஞர் தன்னை குறித்து அவதூறு பிரப்பியதாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக ஹெர்ட் கோரியிருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com