இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை என உள்நாட்டு எரிவாயு விநியோக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என்று அந்த நாட்டு எரிபொருள் விநியோக நிறுவனமான 'லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்' தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்கு வந்த சிலிண்டர்கள் கடைசி இருப்பை நேற்று நிறுவனம் விநியோகித்துள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மொத்தமாக 16,000 சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன.
இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வருகிற ஞாயிறு அன்று இலங்கையை வந்தடையும், இதனால் சிலிண்டர் விநியோகம் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிவாயுவுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.