போரில் தினமும் 200 வீரர்களை இழக்கிறோம்: உக்ரைன்
ரஷியாவுடனான போரில் தினமும் உக்ரைன் படையைச் சேர்ந்த 200 வீரர்கள் உயிரிழப்பதாக உக்ரைன் அரசு கவலை தெரிவித்துள்ளது.
ரஷியாவுடான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும் உக்ரைன் சமீப நாள்களாக ஆயுதப் பற்றாக்குறை காரணமாக வலுவான எதிர் தாக்குதலைத் தர முடியாமல் திணறி வருகிறது.
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களையும் அதிநவீன ஏவுகணைகளையும் அனுப்பி வைத்தும் ரஷியாவிற்கு சரியான பதிலடி தர முடியவில்லை.
உக்ரைனின் 30 சதவீதமான பகுதிகளை ஆக்கிரமித்ததுடன் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள சியெவெரோடொனட்க்ஸ் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதில் ரஷியா மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இதற்காக சண்டையிட்டு வரும் தங்கள் நாட்டுப் படையினருக்கு உதவுவதற்காக, கூடுதல் படையினரை ரஷியா அனுப்பி படைபலத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியாவின் தாக்குதலுக்கு தினமும் 100-லிருந்து 200 வீரர்களை இழந்து வருவதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் மைக்காலோ போடோலியாக் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷியப் படையினர் பீரங்கி, ஏவுகணைகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.