சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கரோனா பரிசோதனைகளை அந்த நாடு மீண்டும் பெரிய அளவில் முன்னெடுத்துள்ளது.
ஷாங்காய் பகுதியில் உள்ள பார் ஒன்றிலிருந்தே தற்போது கரோனா அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணத்தினால் சீனாவில் மீண்டும் பெரிய அளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா அதிகரித்து வருவதால் சீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட சோயங் மாவட்டம் உட்பட இரண்டு மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பார்க்கும்போது சீனாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் இதுவரை கரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆகும். நாட்டில் உள்ள முதியோரையும், மருத்துவத் துறையையும் பாதுகாக்க முற்றிலுமாக கரோனாவை ஒழிப்போம் என்ற திட்டத்தையும் சீனா செயல்படுத்தியது.
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.