மெக்சிகோவில் சட்ட விரோதமாக லாரியில் அழைத்து வரப்பட்ட இந்தியா்கள் உள்ளிட்ட 366 அகதிகளை அதிகாரிகள் மீட்டனா்.
இது குறித்து குடியேற்ற அதிகாரிகள் கூறியதாவது:
கௌதமாலா எல்லையையொட்டிய சியாபாஸ் மகாணத்தில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை குடியேற்ற அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் 366 அகதிகள் மறைந்திருந்தது கண்டறியப்பட்டது.
அந்த அகதிகள் அனைவரும் இந்தியா, நேபாளம், வங்கதேசம், யேமன், உஸ்பெகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஈக்வடாா், பெரு, ஹோண்டுரஸ், வெனிசூலா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து வந்திருந்தனா்.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் செல்வதற்காக அவா்கள் சட்ட விரோதமாக அழைத்துவரப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
அவா்களை டாபாசுலா நகருக்கு அழைத்துச் சென்று, விசாக்களை விநியோகிப்பதற்காக அதிகாரிகள் காத்திருக்க வைத்தனா். எனினும், அங்கிருந்து வெளியேறி வடக்கு திசை நோக்கி செல்ல அகதிகள் முயன்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.