பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரம் முதல் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே அந்நாட்டின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டே வருகிறது. இதன்காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.
இதையும் படிக்க | அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம்?
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விற்பனை நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் நீடித்துவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களை தற்காலிகமாக மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை (20.6.2022) முதல் அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க | அக்னிபத் திட்டம்: எதிரெதிர் திசைகளில் தமிழ்நாடு ஆளுநர், முதல்வர்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அறுவை சிகிச்சைகளை மட்டும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் வீட்டிலிருந்தே இயங்கும் வகையில் வகுப்புகளை திட்டமிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இலங்கையில் பொதுப் போக்குவரத்தும் 50 சதவீதம் அளவுக்கே இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நிலவும் அமெரிக்க டாலா்கள் தட்டுப்பாடு காரணமாக என்ஜின் ஆயிலுக்கான தொகையை செலுத்த முடியாததால் ரயில் சேவை விரைவில் முடங்கும் என ரயில்வேயும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.