உக்ரைன் அகதிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ரஷியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் தனது நோபல் பரிசை ஏலம் விட்டதில் ரூ.808 கோடி கிடைத்துள்ளது.
ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி முரடோவ் (60) பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். நோவாயா காஸிடா (Novaya Gazeta) என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசுத் தொகையான 5 லட்சம் டாலரை (ரூ.3.80 கோடி) அவர், மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக வழங்கினார்.
தற்போது உக்ரைன் அகதிகளுக்கான உணவு மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ செலவுக்காக நிதி திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய நோபல் பதக்கத்தை ஏலம் விட கடந்த மார்ச் மாதம் முடிவு செய்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஹெரிடேஜ் என்கிற நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில் அவருடைய நோபல் பதக்கம் 103 மில்லியன் டாலருக்கு (ரூ.808 கோடிக்கு) ஏலம் போனது. அத்தொகை முழுவதையும் உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதாக டிமிட்ரி முரடோவ் அறிவித்துள்ளார்.
இதனால், டிமிட்ரியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.