உக்ரைனில் 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய தளங்கள் அழிப்பு
ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனில் உள்ள 150-க்கும் அதிகமான பாரம்பரிய தளங்கள் ரஷியாவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐநாவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். அதில், 150-க்கும் அதிகமான பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் சார்ந்த தளங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அழிக்கப்பட்டுள்ள தளங்களில் அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள் மற்றும் மதம் சார்ந்த கட்டடங்கள், நூலகங்கள் ரஷியப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தகவலை யுனெஸ்கோ உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து யுனெஸ்கோவின் இயக்குநர் கூறியதாவது: “உக்ரைனின் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் ரஷியா தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். எந்த ஒரு சூழலிலும் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது.” என்றார்.
உக்ரைன் தரப்பில், ரஷியா யுனெஸ்கோவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதம் ரஷியாவின் தலைமையில் நடைபெறவிருக்கும் உலக பாரம்பரியத் தளங்களுக்கான கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.