உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளால் மட்டுமே மோசமாகி வரும் சோமாலியாவின் பஞ்சத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
உலகின் மற்ற பகுதிகளை விடவும் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையும், பொருளாதார நெருக்கடியும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக சோமாலியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் உள்ளிட்ட இன்னபிற காரணங்களால் அந்நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | இலங்கை: டீசல் நிரப்ப 5 நாள்கள் காத்திருந்த லாரி ஓட்டுநா் பலி
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 நாடுகள் பங்கேற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் உலக உணவுத் திட்டத்தின் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இயக்குநர் மைக்கேல் டன்போர்டு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஆப்பிரிக்காவில் நிகழவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க உலக நாடுகள் உடனடியாக உதவ முன்வரவேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும் சோமாலியாவில் நிலவிவரும் கடும் பஞ்சத்தை போக்க உலக நாடுகள் இந்த சந்தர்ப்பத்தை தவிர்க்காமல் உதவ முன்வரவேண்டும் எனவும் இல்லையேல் அங்கு பெரும் பேரழிவு நிகழ வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார்.
காலநிலை மாற்றம், ரஷிய உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் உணவு தானியங்கள் பெறுவதில் கடந்த சில மாதங்களாக சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் மேற்கு ஆப்பிரிக்காவில் உணவு பாதுகாப்பின்மையால் 8.9 கோடி பேர் தவித்து வருகின்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் கவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு
கடந்த 2011ஆம் ஆண்டு சோமாலியாவில் பஞ்சத்தால் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
தற்போதைய சூழல் அதைவிடவும் மோசமாகி வருவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. ஐபிசி அறிக்கையின்படி 3 லட்சத்து 86 ஆயிரத்து 400 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரிட்டன் மற்றும் ஜி7 நாடுகள் 700 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்குவதாக உறுதியளித்தன. எனினும் இந்தத் தொகையானது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பஞ்சத்தை சரிகட்ட போதவில்லை.
சோமாலியாவில் நிலவிவரும் கடும்பஞ்சத்தை உலக நாடுகளின் உதவியில்லாமல் போக்க முடியாது என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.