உக்ரைனுக்கு அமேசான் ஆதரவளிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றன.
ஏற்கெனவே ரஷிய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் நுழைந்த ரஷிய ராணுவம் நேற்று கைப்பற்றியதாக அறிவித்தது. அதனை உக்ரைனும் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி டிவிட்டரில்,’உக்ரைனின் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. அமேசான் உக்ரைன் மக்களுடன் உறுதுணையாக இருந்து தொடர் உதவிகளைச் செய்யும். மேலும், எங்கள் ஊழியர்களிடமிருந்து பண நன்கொடைகளைப் பெற்று உதவிகளைச் செய்யும் அரசு சாரா அமைப்பினர்களை (என்ஜிஓ) ஆதரிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.