சபரோஸ்ஸியா அணுமின் நிலையத்தின் முக்கிய உபகரணங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமையிடம் உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 9-வது நாளாகத் தாக்குதலை நடத்தி வருகிறது. கெர்சன்
நகரைக் கைப்பற்றிய ரஷியப் படை இன்று சபரோஸ்ஸியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
சபரோஸ்ஸியா அணுமின் நிலையத்தை சுற்றிவளைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அணுமின் நிலையம் தீப்பிடித்து எரிந்தால் செர்னோபில் உலையை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என சர்வதேச அணுசக்தி முகமை ரஷியாவுக்கு வலியுறுத்தியது.
தொடர்ந்து, சபரோஸ்ஸியா அணுமின் நிலையத்தின் முக்கிய உபகரணங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமையிடம் உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலை கைவிட வேண்டும் என ரஷியாவுக்கு அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.