ஹைதராபாத்: உக்ரைனின் பல நகரங்களை ரஷிய ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சுமியில் ஏராளமான மாணவர்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காதில், ராணுவத் தாக்குதல்களால் எழும் ஒலிகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்தடை காரணமாக, சுமி மாநில பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக சுமியிலிருந்து ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு மாணவர் குடிநீர் கிடைக்காததால், பனிக்கட்டிகளை சேகரித்து வருவதும், நிலைமை எவ்வளவு மோசமாகியிருக்கிறது என்பதை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் சிலர், தங்களுக்கு வேறு வழியில்லை, அதனால்தான் பனிக்கட்டிகளை சேகரித்து, சுகாதாரமற்ற இந்த தண்ணீரைக் குடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுமியில் உள்ள சர்வதேச மாணவர்களின் விடுதிக்கு அருகே மிகப்பயங்கர தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை, இங்கு குடிநீரோ, மின்சாரமோ இல்லை என்றும் சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.