ரஷியா - உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10ஆம் தேதி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவைத் தொடர்ந்து முப்படைகளும் உக்ரைனை தாக்கி வருகின்றனர். தொடர் தாக்குதல் மூலம் முக்கிய நகரங்களையும் ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ளனர்.
போரை நிறுத்தக் கோரி சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் ரஷியாவுக்கு அழுத்தம் தந்தாலும் தொடர்ந்து 12ஆவது நாளாக உக்ரைனை தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் திமிட்ரோ குலேபா ஆகியோர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரஷிய அதிபருடன் 50 நிமிடங்கள் பேசிய மோடி
இருவரின் பேச்சுவார்த்தையானது, மார்ச் 10ஆம் தேதி துருக்கி நாட்டில் கடற்கரை மாகாணமான அண்டல்யாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சூழலில் அடுத்த கட்டமாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.