ரஷிய எண்ணெய்களை மேற்கத்திய நாடுகள் இறக்குமதி செய்வதைத் தடை செய்தால் உலகச் சந்தையில் பேரழிவு ஏற்படும் என ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 12-வது நாளாக ரஷியப் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. அந்நாட்டின் பல முக்கியப் பகுதிகளை ரஷியா கைப்பற்றி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
முன்னதாக, போரைத் தொடர்ந்ததால் ஐரோப்பிய கவுன்சில் ரஷியாவிற்கு கண்டனம் விடுத்ததுடன் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
மேலும், ஐரோப்பிய கவுன்சிலில் இருந்தும் ரஷியா தற்காலிகாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷிய துணை பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக், ‘ ரஷியாவின் எண்ணைகளை மேற்கத்திய நாடுகள் இறக்குமதி செய்வதை நிறுத்தினால் உலகச் சந்தை பேரழிவுகளைச் சந்திக்கும். ஐரோப்பிய சந்தையில் உடனடியாக ரஷிய எண்ணெகளைப் புறக்கணிக்க முடியாது. அதற்கு குறைந்தது ஓராண்டாவது தேவைப்படும். தடை செய்தால் ரஷியா எண்ணெய்களின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 300 டாலர்களாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது யாருக்கும் பயனற்றது’ எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் ‘ ஐரோப்பிய அரசியல்வாதிகள் தங்கள் குடிமக்களுக்கும், நுகர்வோருக்கும் அவர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் எரிவாயு நிலையங்கள், மின்சாரம், வெப்பமாக்கல் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயரும் என்பதையும் நேர்மையாக எச்சரிக்க வேண்டும்’ எனக் கூறினார்.
உக்ரைன் - ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலரை நெருங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.