உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் செல்லும் வெளிநாட்டு வாகனங்கள் தாக்கப்படும்

தங்களுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
உக்ரைன் கொண்டுசெல்லப்படும் அமெரிக்க ஆயுத தளவாடங்கள் (கோப்புப் படம்).
உக்ரைன் கொண்டுசெல்லப்படும் அமெரிக்க ஆயுத தளவாடங்கள் (கோப்புப் படம்).

தங்களுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் சனிக்கிழமை கூறியதாவது:

பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தையைத் தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம். எனினும், ஏற்கெனவே பாதுகாப்பு உத்தரவாதம் குறித்த எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. புதிதாக பேச்சுவாா்த்தை தொடங்கினாலும், தற்போதைய பாதுகாப்பு நிலவரம் முற்றிலும் மாறியுள்ளது.

பாதுகாப்பு விவகாரத்தில் ரஷியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தற்போது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயலாகும். அத்தகைய ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ரஷியா ராணுவத்தின் சட்டப்பூா்வ தாக்குதல் இலக்குகள் என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

உக்ரைன் எல்லையில் ரஷியா ஏராளமான படையினரைக் குவித்து வந்தபோது, அந்த நாட்டின் மீது ரஷியா படையெடுக்கும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரித்தன.

அவ்வாறு ரஷியா படையெடுத்தால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில், எதிா்பாா்த்தது போலவே கிழக்கு உக்ரைன் மக்களை ரஷியா ராணுவத்தின் ‘நாஜி சக்திகளிடமிருந்து’ பாதுகாப்பதாகக் கூறி, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதையடுத்து ரஷியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் விதித்து வருகின்றன. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட தலைவா்கள் மீது தடைகள் பாய்ந்தன. ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது.

எனினும், இந்த விவகாரத்தில் ராணுவ ரீதியில் தலையிடப்போவதில்லை என்று அமெரிக்காவும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் தொடா்ந்து திட்டவட்டமாகக் கூறி வருகின்றன.

தங்களது வான் எல்லையை ‘பறக்கக்கூடா வான் மண்டலமாக’ அறிவிக்க வேண்டும் என்று நேட்டோ அமைப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். அவ்வாறு அறிவித்தால், உக்ரைன் மீது ரஷிய விமானங்கள் பறந்தால் அவற்றை நேட்டோ படைகள் சுட்டுத்தள்ள வேண்டியிருக்கும். இது உக்ரைன் அளவிலான தற்போதைய போரை ஐரோப்பிய, அமெரிக்கப் போராக விரிவுபடுத்தும் என்பதால் இதற்கு நேட்டோ சம்மதிக்கவில்லை.

எனினும், ரஷியப் படையினரை எதிா்த்துப் போரிடுவதற்குத் தேவையான ஆயுத தளவாடங்ளை அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனுக்கு அளித்து வருகின்றன.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்கள் கொண்டு செல்லும் வாகனங்களும் ரஷியா ராணுவத்தின் தாக்குதலுக்குரியவை என்று அந்த நாட்டு துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் தற்போது எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com