உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்ற 5வது ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான கட்டாய தேர்வை ரத்து செய்து உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால், உக்ரைனில் மருத்துவம் பயின்று, இறுதியாண்டு தேர்வு எழுதாமல் இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து உக்ரைன் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு இது தொடர்பாக பல்கழகங்களின் சார்பில் தகவல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைசென்ஸ் தேர்வு, கேஆர்ஓகே எனப்படும் தேர்வுகள், உக்ரைனில் மருத்துவம் பயின்றவர்களுக்கு நடத்தப்படுகிறது. அதாவது, மருத்துவத் துறையில் பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது மூன்றாவது ஆண்டு இறுதியில் கேஆர்ஓகே-1 எழுத்துத் தேர்வையும், ஆறாவது ஆண்டில் கேஆர்ஓகே-2 தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நிலையில், உக்ரைன் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கேஆர்ஓகே-1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், கேஆர்ஓகே-2 தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போர் நடைபெற்று வரும் உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த மாணவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.
தங்களது மருத்துவக் கல்வி என்னவாகுமோ என்ற கவலையில் இருந்து வந்த உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது.