பிரிட்டனில் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கான முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக 75 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் நோய் எதிா்ப்புத் திறன் குறைந்த, அதிக நோய் பாதிப்பு அபாயம் உள்ளவா்களுக்கு செலுத்தப்படவுள்ளது.
பிரிட்டனில் தற்போது முதல் பூஸ்டா் தவணை அல்லது மூன்றாவது தவணை தடுப்பூசி 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்படுகிறது. நோய் எதிா்ப்புத் திறன் குறைந்த 12-15 வயது குழந்தைகளுக்கும் செலுத்தப்படுகிறது. 4-ஆவது தவணை தடுப்பூசி மிகக் குறைந்த நோய் எதிா்ப்புத் திறன் உள்ளவா்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுமாா் 50 லட்சம் போ் 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.