உக்ரைன் போர்: ஹிட்லரிடமிருந்து தப்பித்தவர் ரஷிய குண்டுவீச்சில் பலி
ஹிட்லரின் நாஜி வதைமுகாமிலிருந்து தப்பித்தவர் ரஷிய குண்டுவீச்சில் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து 28-வது நாளாக நடைபெற்று வருகிறது. போரின் தீவிரம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருப்பதால் ரஷியா போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ரஷியா தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மேலும், உக்ரைனின் கீவ், கார்கிவ் பகுதிகளை முழு கட்டுப்பாட்டில் வைக்க தொடர்ந்து ரஷியா முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், போரிஸ் ரொமன்சென்கோ(96) என்பவர் இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் சிக்கி அங்கிருந்து தப்பி உக்ரைனின் கார்கிவ் பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த வெள்ளிக்கிழமை ரஷியப் படைகளின் குண்டு வீச்சில் அவர் பலியானதாவும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ‘ஹிட்லரிடமிருந்து தப்பித்தவர் புதினால் கொல்லப்பட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.