உலக மக்கள் அனைவரும் உக்ரைன் நாட்டு மக்களுக்காக போராட முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. உக்ரைனில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ரஷியா தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தான் பேசிய ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் போனில் டைமர் செயலியில் உக்ரைன் வான்வழித் தாக்குதல் சத்தத்தை பதிவு செய்து காட்டி, 'இது 20 நொடிகள் மட்டும்தான். ஆனால், எங்கள் மக்கள் மணிக்கணக்கில், நாள்கள், வாரங்கள் என இந்த சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ரஷிய ஏவுகணைகள், வெடிகுண்டுகள் போன்றவற்றிலிருந்து எங்கள் மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, முதியவர்களுக்கு உதவி செய்து, வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
உக்ரைனில் 4.4 கோடி மக்கள் இருக்கிறார்கள். ரஷியப் படைகள், உக்ரைனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு நேட்டோ அமைப்பு தடை விதிக்க வேண்டும். உக்ரைன் வான்வழி மூடப்பட வேண்டும்.
உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும். உங்கள் பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், அலுவலகங்களில், தெருக்களில் இறங்கி அமைதி, சுதந்திரத்தை வலியுறுத்தி உக்ரேனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
ஐரோப்பாவில் அனைத்து மக்களையும் தங்கள் பிடியில் கொண்டு வர வேண்டும் என்று ரஷியா நினைக்கிறது. இதற்கு உக்ரைன் போர் ஓர் ஆரம்பம்தான். மக்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் சுதந்திரத்திற்கு எதிராக ரஷியா செயல்படுகிறது' என்று பேசியுள்ளார்.