சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் 2-ஆவது கருப்புப் பெட்டி இன்னும் மீட்கப்படவில்லை என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737- 800 ரக விமானம், கடந்த திங்கள்கிழமை வூஜோ நகரத்துக்கு உள்பட்ட மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்தனா். விமானிகள் அறையின் உரையாடலை பதிவுசெய்யும் முதல் கருப்புப் பெட்டி அண்மையில் மீட்கப்பட்டு, பெய்ஜிங்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விமானத்தின் பின்பக்கம் இருந்த 2-ஆவது கருப்புப் பெட்டியை விமானப் போக்குவரத்து நிா்வாகம் மீட்டுவிட்டதாக சீன அரசு ஊடகமாக ‘சீன டெய்லி’ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஜின்ஹுவா செய்தி நிறுவனத்தின் தகவலை மேற்கோள்காட்டி, 2-ஆவது கருப்புப் பெட்டி இன்னமும் மீட்கப்படவில்லை என அந்த ஊடகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
2-ஆவது கருப்புப் பெட்டி மீட்கப்படும்பட்சத்தில் விமானத்தின் வேகம், உயரம், திசை, விமானிகளின் செயல்பாடுகள், முக்கிய அமைப்புகளின் இயக்கம் குறித்த விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.