புதிய சமூக வலைதளம் ஒன்றை உருவாக்குவது குறித்து தீவிரமாக யோசித்துவருவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ட்விட்டரில் இன்று காலை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பயனாளி ஒருவர் அவரிடம், "புதிய சமூக வலைதளம் ஒன்றை உருவாக்குவது குறித்து எண்ணி இருக்கிறீர்களா? பேச்சு சுதந்திரத்திற்கும் அதனை பின்பற்றுதலுக்கும் முன்னுரிமை அளிக்கும் சமூக வலைதளம், பிரசாரங்கள் குறைவாக உள்ள சமூக வலைதளம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படையாக கொண்ட சமூக வலைதளம். அம்மாதிரியான சமூக வலைதளம் தேவை என நினைக்கிறேன்" என கேள்வி எழுப்பியிருந்தார்.
ட்விட்டரில் மிக பிரபலமாக உள்ள எலான் மஸ்க், சமீப காலமாகவே ட்விட்டரையும் அதன் கொள்கைகளையும் கடுமையாக விமரிசித்து வந்துள்ளார். பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளை நிலைநாட்ட தவறிய ட்விட்டர் ஜனநாயகத்தை பலவீனமடைய செய்திருக்கிறது என சாடியிருந்தார்.
பேச்சு சுதந்திரத்தை ட்விட்டர் நிலைநாட்டுகிறதா என ட்விட்டரில் வாக்கெடுப்பும் நடத்தியுள்ளார். இந்த வாக்கெடுப்பின் விளைவுகள் முக்கியமாக இருக்க போகிறது. எனவே, கவனமாக வாக்களியுங்கள் என அவர் பதிவிட்டிருந்தார். அதில், 70 சதவிகிதம் பேர், பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டவில்லை என்றே பதில் அளித்துள்ளனர்.
ட்விட்டர், மெட்டாவின் பேஸ்புக், ஆல்பாபெட்டின் யூடியூப் ஆகிய சமூகவலைதளங்கள் பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறது என நினைக்கும் மக்கள், புதிய சமூக வலைதளம் ஒன்றை எலான் மஸ்க் உருவாக்கும்பட்சத்தில், அதற்கு மாறுவதற்கு வாய்ப்புண்டு. இம்மாதிரியான எண்ணற்ற புதிய சமூக வலைதளங்கள் சமீப காலங்களில் உருவாகியுள்ளது.
ஆனால், முக்கிய சமூக வலைதளங்களுக்கு இணையாக இவற்றால் பிரபலமடைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.