பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கையில் குறைந்த வருவாயுள்ள குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் புத்தாண்டுப் பரிசு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவில் அந்நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
மேலும், அந்நியச் செலவாணியின் கையிருப்பும் குறைந்ததால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், குறைந்த வருவாயுள்ள குடும்பங்களுக்கு புத்தாண்டுப் பரிசாக ரூ.5,000 வழங்க இலங்கை அரசு முன்வந்துள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுகளில் இந்த ‘போனஸ்’ வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய இலங்கை மின்சக்தித் துறை அமைச்சர் காமினி லோகுகே ‘ 31 லட்சம் குடும்பங்கள் இந்தப் புத்தாண்டு பரிசு பெற தகுதியானாவர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.